Monday, August 3, 2015

புத்தர் கதை

ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.

"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.

சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.

"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.

"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.

"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"

"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."

"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.

"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.

புத்தர் புன்னகை புரிந்தார்.

நீதி:

இயற்கையில் இருந்து கிடைக்கும் எதையும் வீணாக்காதவனே இறைவனை அடைய முடியும்

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நீதிக்கதை! நன்றி!

Unknown said...

நன்றி சுரேஷ்

Ravichandran M said...

அருமையான கதை! ஏழைகள் இப்படித்தான் இருப்பார்கள்! கொஞ்சம் நிலைமை மேம்பட்டுவிட்டால், தேவையற்ற ஒன்றாகி, தூக்கி எறிந்துவிடுவார்கள்! காலம் மாறிவிட்டது. இக்காலத்திற்கு ஒவ்வாத கதை!