Wednesday, September 2, 2015

பொய்கையாழ்வர்

பொய்கையழ்வார்

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார்.காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில்திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதிஎனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பொய்கைவாழ்வார் 12 ஆழ்வார்களில் முதலாழ்வார் ஆவர். காஞ்சியில் ஐப்பசி மதம் திருவோணம் நட்சத்திரத்டில் திருவெஃகா எனும் ஊரில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பது செவி வழி செய்தி.
திருமாலின் 10 அவதாரங்களையும் பாடியிருக்கார்.

பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார்.

பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
2081 வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
இடர்-ஆழி நீங்குகவே என்று (1)



2082 என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)



2083 பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
நீ அளவு கண்ட நெறி (3)



2084 நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரன் (4)



2085 அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று (5)



2086 ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்-
திருவரங்கம் மேயான் திசை (6)



2087 திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு (7)



2088 மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
போர் ஆழிக் கையால் பொருது? (8)



2089 பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன
்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் (9)



2090 மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)



2091 வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண் கேளா செவி (11)



2092 செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே-
ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)



2093 இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் (13)



2094 அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் (14)



2095 முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது (15)



2096 பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி (16)



2097 அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)



2098 நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்-
மருது இடை போய் மண் அளந்த மால் (18)



2099 மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)



2100 பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா-
மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)



2101 நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால்
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும்
படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம்
அடை ஆழி நெஞ்சே அறி (21)



2102 அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்-
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)



2103 தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த-
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல் (23)



2104 விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே?
ஓங்கு ஓத வண்ணா உரை (24)



2105 உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போலத் திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும் (25)



2106 எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை (26)



2107 மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்-
கார்க் கோடு பற்றியான் கை (27)



2108 கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)



2109 இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி (29)



2110 தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)



2111 புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை? (31)



2112 இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் (32)



2113 நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)



2114 என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில்
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)



2115 ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
முடியான் படைத்த முரண்? (35)



2116 முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனது ஆகத்தானே இரணியனைப்
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை? (36)



2117 வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)



2118 ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம் (38)



2119 இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே-
பேர் ஓத வண்ணர் பெரிது (39)



2120 பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்-
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)



2121 குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
திறன் உரையே சிந்தித்திரு (41)



2122 திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மால் ஓத வண்ணர் மனம்? (42)



2123 மன மாசு தீரும் அரு வினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தம் தொழாநிற்பார் தமர் (43)



2124 தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)



2125 ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)



2126 பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்
போகத்தால் பூமி ஆள்வார் (46)



2127 வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள
்கைந் நாகம் காத்தான் கழல் (47)



2128 கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)



2129 மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது (49)



2130 அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது (50)



2131 எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில்
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண் (51)



2132 எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று (52)



2133 சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு (53)



2134 அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் (54)



2135 அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)



2136 பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன் (56)



2137 அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது (57)



2138 தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை (58)



2139 அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)



2140 சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)



2141 உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு (61)



2142 புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)



2143 தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் (63)



2144 நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என்மேல் வினை? (64)



2145 வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால் (65)



2146 காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர் (66)



2147 பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு (67)



2148 உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)



2149 பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)



2150 சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)



2151 நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)



2152 அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)



2153 புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் (73)



2154 ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு (74)



2155 காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி (75)



2156 வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் (76)



2157 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் (77)



2158 இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)



2159 கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து? (79)



2160 அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்? (80)



2161 ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை (81)



2162 படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை (82)



2163 வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் (83)



2164 பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி? (84)



2165 படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ (85)



2166 நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி (86)



2167 இனி யார் புகுவார் எழு நரக வாசல்?
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)



2168 நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு? (88)



2169 எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் (89)



2170 வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)



2171 ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)



2172 வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய்
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)



2173 வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)



2174 செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும்
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா (94)



2175 நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)



2176 திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கண் பிடி (96)



2177 பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)



2178 பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)



2179 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)



2180 ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை (100)



No comments: