Showing posts with label ரமண மகரிஷி. Show all posts
Showing posts with label ரமண மகரிஷி. Show all posts

Monday, June 16, 2008

ஈஸ்வரன் மாதொருபாகன் ஆன கதை

இது ரமண மகரிஷி சொன்ன கதை

ஒரு தடவை கைலாய சிகரத்தில் பரமேச்வரன் ஸூகாஸீனராக இருந்த போது பார்வதி பின்னாலிருந்து வந்து வேடிக்கையாக தன் கைகளினால் ஒரு கணம் அவர் கண்களை பொத்தினாள். உடனே ஈசுவரனுடைய இரு கண்களான சூரியசந்திரர்கள் கலைகளிழந்து ம்றையவே லோகமெல்லாம் இருளில் மூழ்கியது.. பிரஜைகள் அல்லற்பட்டார்கள் தேவர்கள் "ஹெ ஈசுவரா, இதென்ன அகாலப் பிரளயம்!" என்று முறையிட்டார்கள். பரமேஸ்வரன் ஸ்மயோசிதமாக நெற்றிக்கண்ணை சட்டெனத்திறந்து பிரகாசம் உண்டாக்கிப் பிரஜைகளின் கஷ்டத்தை நீக்கினார். பார்வதி பயந்து போய்க் கைகளை அகற்றினாள். பரமெசுவரர் ஒன்றும் சொல்லவில்லை. தேவி நடுங்கினாள். ஸ்வாமி நயத்துடன் , " தேவி நமக்கு இது வேடிக்கையே தவிர என் கண்களை மூடியதால் பிரஜைகள் எவ்வளவு தவித்து போனார்கள் பார்த்தாயா? நமக்கு ஒரு கணம் தானே என்று நீ சொல்லலாம். ஆனால் லோகங்களுக்கு அது ஒரு யுகமல்லவா. இதென்ன கார்யம்? எனறு பிரியத்துடன் கடிந்தார்.

"பரமேச்வரனுடைய அந்த நயமான கண்டனத்தை கேட்ட பார்வதி தன் அபராதத்தை உணர்ந்து வெட்கங்கொண்டு " இந்த பாபத்திற்குப் பரிகாரமாக நான் தவம் செய்ய வேணும் என்று அனுமதி கொடுங்கள்" என்று பரமெச்வரனிடம் வேண்டிக்கொண்டாள். நீ ஜகன்மாதா. உனக்குப் பாபமேது ? நீ தவம் செய்ய தேவையில்லை" என்றார் பரமேச்வ்ரன். அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை. உலகத்திற்கு வழிகாட்டியாக தவம் செய்கிறென் என்று பிராண நாதனை பிரார்த்தித்து அனுமதி பெற்று தவம் செய்வதற்காக தென்முகமாகத் தேவி புறப்பட்டாள்.

அப்பொழுது காசியில் மழையில்லாமல் பஞ்சமேற்பட்டு ஜனங்கள் உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வழியே வந்த தேவி, அதை பார்த்து கருணை கொண்டு நினைத்த மாத்திரத்திலேயே ஒரு பெரிய மாளிகையை எழுப்பி அன்ன பூர்ணா என்கிற பெயரில் அங்கே அக்ஷய பத்திரத்துடன் ஆயிரக்கணக்கில் ஜனங்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தாள். கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவருடைய கீர்த்தி பத்து திக்குகளிலும் பரவியது.

காசி ராஜா தன் பண்டாரத்திலிருந்து தான்ய மெல்லாம் தீர்ந்து போன படியால் என்ன செய்வதென்று தவித்துக்கொண்டிருந்த போது ஒரு ஸ்திரி அன்ன பூர்ணா என்கிற பெயருடன் அன்ன தானம் செய்து கொண்டிருப்பது தெரியவந்த்து. அவன் ஆச்சரியப்பட்டு " நாம்மால் முடியாத கார்யம் ஒரு பெண்ணால் ஸாத்தியப்படுகிறதே. இதென்ன விந்தை? பரீட்சித்து பார்ப்போம் என்று ஒரு ஆளை அன்ன பூர்ணியிடம் அனுப்பி கொஞ்சம்படி அரிசி கடனாக தரவேணும் என்று கேட்டு வாங்கி வரச் சொன்னான். "தான்யம் கொடுப்பதற்கில்லை வந்தால் அன்னகிடுகிறேன்" என்று பதில் வந்தது. சரி நாமே தான் போய் பார்க்கலாமென்று அரசனும் மந்திரிகளும் மாறு வேஷத்தில் போய் அவளுடைய மாளிகையின் பந்தியில் உட்கார்ந்தார்கள். எவ்வளவு பரிமாறினாலும் குறையாமல் அக்ஷயமாக வளர்ந்து கொண்டுருந்த போஜன வகைகளைப் பார்த்த அரசன் விவேகியாகையால் "இது மனிதர்களால் முடிகிற கார்யமில்லை. இவள் ஒரு தேவதையே என்று தீர்மானித்தான். சாப்பாடு முடிந்ததும் அவளை பக்தியுடன் நமஸ்கரித்து, "தாயே, நீ என்றும் எங்களுடனேயே இருந்து எங்களை கடைத்தேற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அம்பாள், அவன் பக்தியைக் கண்டு மகிழ்ந்து, நிஜ ரூபத்தில் தோன்றி "அப்பனே, உன் பத்திக்கு மகிழ்ந்தேன். நான் இத்தனை நாட்கள் உன் நாட்டில் வசித்ததனால் மழை இல்லாத குறை தீர்ந்து போகும். இப்பொழுது மழையும் பெய்யும். பிறகு இந்தப் பஞ்சமிராது. நான் இனியும் இங்கு தாமதிக்க முடியாது. தென் திசை நோக்கி போய்த்தவம் செய்ய வேண்டும். நீ ஸுகமாக ஜனங்களை பரிபாலித்து வா?" என்றாள். ராஜா, எங்கள் பூஜையை ஏற்கத் தக்கவாறு இங்கேயும் அம்பாள் ஸாந்நித்யம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான். 'சரி' என்று தேவி அனுக்ரஹித்து விட்டுப் போனாள். உடனே மழை பெய்து தேசம் சுபிட்சமானது, அம்பாள் தங்கியிருந்த புண்ணியஸ்தலம் தான் இப்பொழுதும் அன்னபூர்ணாலயமென்று சொல்லப்படுகிறது.

"காசியிலிருந்து அவ்வாறு புறப்பட்ட பார்வதி, காஞ்சிபுரத்திற்கு வந்தாள். மணலினால் சிவலிங்கம் அமைத்திப் பூஜித்தாள். பாப விமோசனமாயிற்று என்று அவள் திருப்தியடைந்த பின் அங்குள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கிண்ங்கி அங்கே காமாக்ஷியாக ரூபம் கொண்டு பிரஸித்தமானாள். அதன்பிறகு அங்கிருந்து விருஷபவாஹனத்தில் ஏறிக் கொண்டு இந்த அருணாசலத்திற்கு புறப்பட்டு வந்தாள்.
முதலில் இங்கே பவளக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் கௌதமரின் புத்திரரான சதானந்தர் அம்பாளை பார்த்து பத்திபரவசமடைந்து ' அம்மா, வா வா ' என்றழைத்து அர்க்யபாத்யங்களால் உபசரித்தார்'. 'என் தந்தை தர்ப்பை, சமித்துகள் கொண்டுவர காட்டுக்குப் போயிருக்குறார். நான் போய் அழைத்து வருகிறேன். நீ இங்கேயே இரு அம்மா" என்று ஓடிச் சென்றார். கௌதமரே காட்டிலிருந்து புறப்பட்டு
நடுவழியில் பிள்ளையை எதிர்கொண்டார். அவரை பார்த்ததும் சதானந்தர் பரம ஆனந்தத்துடன் "அம்மா வந்திருக்கிறாள், தேவி வந்திருக்கிறாள்" என்று கூச்சலிட்டார். இமைப்பொழுதில் அங்குள்ள செடி கொடிகளெல்லாம் துளிர்த்து புஷ்பங்களும், பழங்களுமாக நிறைந்து சொரிந்தன. கௌதமருக்கு ஆச்சரிய மேற்பட்டு பிள்ளையினருகில் வந்து "அம்மா யாரடா?" என்று கேட்டார். சதானந்தர் தழுதழுக்கும் குரலில் " அம்மா பார்வதியே வந்திருக்கிறாள்" என்றார். கௌதமர் புளகாங்கிதமடைந்து ஓடோடி ஆசிரமத்திற்கு வந்து அம்பாளை பூஜித்தார். அதன் பிறகு கௌதமர் சொன்ன பிரகாரம் அம்பாள் நெடுந் தவம் செய்தாள். மஹா தேவன் பிரத்யக்ஷமாகி "வரம் கேள்" என்றார்.
தேவி மிக வினயமாக "ஸ்வாமி" தாங்கள் இவ்வளவு பிரஸன்னராகியிருந்தால் தங்கள் தேகத்தில் பாதிப்பாகத்தை எனக்கு தர வேண்டும். இனித் தங்களை விட்டு வேறு சரீரத்துடன் என்னால் வாழ முடியாது. வேறு சரீரத்தில் இருந்தேனேயானால் இது போல் குற்றம் இனியும் செய்து அதற்காக தங்களை பிரிந்து இதே மாதிரி அல்லல் பட வேண்டியிருக்கும். ஆகவே அனுக்கிரகிக்க வேணும் என்று பிரார்த்தித்தாள். பரமேச்வரரும் அம்பாளின் வேண்டுகோளுக்கிணங்கி அப்படியே அனுக்கிரகித்து அர்த்த நாரீச்வரர் ஆனார். ஜகன் மாதா அர்த்தாங்கினியான கதை இது தான்". இந்த கதையைக் கூறும்போது பல இடங்களில் பகவான்(ரமண மகரிஷி) கண்களில் நீர் நிறைந்தது. குரலும் கம்மியது. உடல் நடுங்கியது. கதை சொல்லி முடித்தவுடன் பகவான் ஆழ்ந்த மௌனம் கொண்டார்.